
மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளரின் அறிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் மற்றும் ரயில், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வசதிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இவ்வழக்கு கடந்த அக்டோபர் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 2005ஆம் ஆண்டு முதல்,15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்ட எந்த உத்தரவுகளையும் செயல்படுத்தாதது குறித்து காணொலிக் காட்சி மூலம் டிசம்பர் 10ஆம் தேதி ஆஜராகி தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் நேற்று (டிசம்பர் 10) நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலம் ஆஜராகினர்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தலைமைச் செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் மேம்படுத்தும் வகையில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் 10 சதவிகிதப் பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும் என்றும் நிதிச்சுமை காரணமாகத் தாழ்தளப் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சென்னை மாநகரில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தாழ்தளப் பேருந்துகளை இயக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. சென்னையில் தற்போது 10 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கக் கூடிய வகையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு நிதிப்பற்றாக்குறை என்றால் பொருளாதார நெருக்கடி நிலைமையைப் பிறப்பிக்கலாமா… போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டியது கட்டாயம்தான். ஆனால் கருணைத் தொகை வழங்குவது கட்டாயமா… கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டது யார் என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் சென்னையில் தாழ்தளப் பேருந்துகளை இயக்கும் வகையில் தரமான சாலைகள் அமைக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை என்றும் சட்டங்களை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தலைமைச் செயலாளரின் அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய ஏதுவாக தற்போது இயக்கப்படும் 10 பேருந்துகள் போதுமானது அல்ல என்று சுட்டிக்காட்டினர்.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் அந்த நிலை உருவாகாது என நம்புவதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து மாற்றுத்திறனாளி உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது போக்குவரத்தில் அவர்களுக்கென வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-பிரியா
இதையும் படியுங்கள்
Be the first to leave a comment