
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல்ப்பரிசு பெற்ற கவிஞர் செல்வி. நாகேஸ்வரி அவர்களின் கவிதை.
சிலிர்க்கவைக்கும் குளிரழகு, – வியர்வை
துளிர்க்கவைக்கும் வெயிலழகு!
மலர்களின் மணமழகு,
மெய் தீண்டும் காற்றழகு!
வளர்ந்து நிற்கும் மரமழகு, – அந்த
மரங்கள் தரும் நிழலழகு!
பறவைகளின் ஒலியழகு,
பாய்ந்துவரும் அலையழகு!
படிப்பென்றால் வரிகள் அழகு,
நடிப்பென்றால் வசனம் அழகு!
பேச்சென்றால் குரலழகு, – பாடும்
பாட்டென்றால் ராகம் அழகு!
அநீதியற்ற நாடழகு,
அழுகுரலில்லா வீடழகு!
அள்ளிக்கொடுக்கும் உள்ளங்கை அழகு,
ஆபத்தில் உதவும் தோழமை அழகு!
இரவை நிறைக்கும் கனவுகள் அழகு,
இதயம் ததும்பும் நினைவுகள் அழகு!
உயிர் தந்த பெற்றோர் அழகு,
உடல் சுமக்கும் பூமித்தாய் அழகு!
உள்ளத்தை நேசிக்கும் உறவழகு,
உலகை வெல்லச்செய்யும் அறிவழகு!
மென்மை பொருந்திய பெண்மை அழகு, – அதை
மேன்மைபடுத்தும் ஆண்மை அழகு!
நனைத்துச்செல்லும் மழையழகு,
நகைத்துப் பேசும் மழலை அழகு!
வறுமையில்லா இளமை அழகு, – அந்த
வறுமையை விரட்டும் திறனழகு!
வார்த்தை மணியால் கோர்க்கப்படும் கவிதை அழகு, – அதை
எழுத வித்திடும் கற்பனை அழகு!
மானிடர்க்கெல்லாம் மனம் அழகு, – அந்த
மனமே என் அகவிழி காணும் பேரழகு!
அழகென்பது யாதெனில்,
கண்ணால் கண்டு ரசித்துவிட்டு கடந்து செல்வதல்ல.
உணர்வுகளால் உள்வாங்கி உயிர் வங்கியில் சேமிப்பது!
ஆம்! அழகென்பது உணர்வுகளால் உள்வாங்கி உயிர் வங்கியில் சேமிப்பது!
***
கவிஞர் சென்னை சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளியில் படித்தவர். ஆங்கிலத்தில் முதுகலை மற்றும் இளங்கலைக் கல்வியியல் முடித்துள்ளார்.
ஆஹா பண்பலையில் மூன்றாண்டுகள் தொகுப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
எழுத்துப் பணியில் அதிக ஆர்வம் கொண்ட செல்வி. நாகேஸ்வரி,
chennaiabi.blogspot.com என்ற தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொடர்புகொள்ள: abi.idi.0603@gmail.com
நிகழ்ச்சியன்று சரியாக கவிதையை கேட்க முடியவில்லை.
ஆனால், இன்று பொறுமையாக ரசித்து படித்துவிட்டேன்!
வாழ்த்துக்கள் சகோதரி!
LikeLike
மிக்க நன்றி சகோதரன்
LikeLike
Nise sister
LikeLike
நன்றி சகோதரி
LikeLike
அழகிற்கு இத்தனை அர்த்தங்களை கூறிய கவிஞர் நாகேஸ்வரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
LikeLike
மிக்க நன்றி சார்.
LikeLike
அழகை உணர்ந்து அழகாய்
வார்க்கப்பட்டிருக்கின்ற
இந்த கவிதை அழகு, அருமை;
தொடர்ந்து எழுதி பல
பரிசுகளைப் பெற்று,
அந்த பரிசுகளுக்கும்
அழகு சேர்க்க
கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
LikeLike